Wednesday, 30 July 2014

கிருஷ்ண லீலா!-11

கிருஷ்ண லீலா!
பக்தர்களை பரவசிக்கும் பெருமாள்,பாற்கடலில் சயனித்திருக்கும் திருமால்
நாராயண எனக் கூக்குரலிட்ட கஜேந்திரனையும் காத்திட்ட கார்மேக வண்ணன்.
மங்கையருள் மாணிக்கமாய் திகழ்கின்ற தேவகியின் திரு வயிறு உதித்தவன்,
தாய்மையின் திருஉருவாம் யசோதையிடம், கொஞ்சி மகிழ மடி புகுந்தவன்,

கெட்டிதயிரை கடத்தில் இட்டு ,மதத்தை அதன் நடுவில் நிறுத்தி சரடை கொண்டு 
இருபுறமும் இறுக்கி பிடித்து இழுத்து விட்டு லாவகமாய் அன்னை தயிரை கடைய 
பாற்கடல் கடையும் பொழுது கூர்மாவதாரம் கொண்டு மலையை  தாங்கியவன் 
பசி தாளாமல் கண்கள்  கசக்கி அதரம் பிதுக்கி செல்ல சினுங்கல் லீலை புரிய 

ஏதும் அறிய அன்னை நல்லாள் செய்யும்  தொழில் விட்டு சனத்தில் விரைந்தாள் 
மகன் தனை தூக்கி மடியில் நிறுத்தி  கண்ணே கனியமுதே என கட்டியணைத்தாள் 
சற்று கணம் பொறுப்பாய் மகனே வெண்ணை திரண்டு வரும் நல்  வேலை இது என 
நறுமணம் கமழும்,பசும் வெண்ணை வழித்து அழுத வாயில் புகட்டிவிட்டால் 

வெண்ணை உண்ட கண்ணன் மகிழ்வில் தானும் மகிழ்ந்து இன்னும் கொஞ்சம் 
அவன் வாயில் வைத்து அவன் சுவைப்பதை கண்டு நெஞ்சம் மகிழ்ந்து என்
செல்லமே கண்ணப்பா ,இதை உனக்காக செய்து வைத்தேன் செல்லப்பா.
என் நிகரில்லா செல்வமே கண்ணையா உன் சிரித்த முகம் இங்கு காட்டையா!


பால லீலா!
ஆதிசேசன் ஆயிரம் தலைகளினால் பாடினாலும் ,முடிவற்றது அவன் பெருமை,
ஆயிரம்,ஆயிரம்,உபதேசங்களை தன் பவள வாயினால் உதிர்த்த மணிவண்ணன்,
யசோதை நந்தரை  அன்னை தந்தையென்றும்,பலராமனை அண்ணாஎன்றும்,
அழைக்க பழகியிருந்தான் ஆராவமுதன் என பெயர் பெற்ற ஆயர்பாடி மன்னன் 

கண்ணன் அவன் நந்தரின் இல்லத்தில் நடுவில் உள்ள பளிங்கு மாளிகை  முற்றத்தில்  
தன் சின்னஞ்சிறு பாதம் தூக்கி தமையனுடன் ஆடுகின்றான் ,மழலையில் பாடுகின்றான் 
வீதி சென்று கருப்பு,வெள்ளை பசுக்களை அதன் கன்றுகளை பெயரிட்டு அழைகின்றான்.
வீட்டில் உள்ள வெண்ணைதனை,கைநிறைய அள்ளி வாயில் வைத்து சுவைக்கின்றான் ,

 தன் பிம்பம் தனை,மணி மண்டபத்தில் பார்த்து பெரும் மகிழ்ச்சி ஒலி எழுப்புகின்றான்,
கொஞ்சும் சலங்கை மணி ஒலிக்க ஓடிசென்று அவனுக்கு அவனே முத்தமிடுகிறான் 
அன்னை யசோதையவள் தன் மைந்தனுக்கு பாலுட்ட பலவிதமாய் முயலுகின்றாள் 

வெண்ணை உண்டு ருசித்த மகன் தன் அன்னையிடம் பாலினை மறுத்தளித்தான் 

பால் நிறைய குடித்தால் தான் பெரியவனாய் ஆகிடலாம் எனஅன்னையவள்  புகட்ட,

அதனை  மறுக்கும் மைந்தன் இவிதமாய் பல புகார்கள் இயம்புகின்றான் தாயிடம் பாலருந்துவதால்  அண்ணாவைப்போல் பெரியவனாய் ஆகிடலாம் என்று சொன்னாய்,
கால்கள் கரும்பாம்பெனவே தரையினில் ஊன்றி நின்றிடலாம்  என்றும் சொன்னாய்,

இவ்வளவு பால் குடித்தும் சிறியவனாய் தான் உள்ளேன்,அண்ணனை போல் இல்லை,
நீ சொன்னது போல் ஒன்றும் ஆகவும் இல்லை,
நீ ருசியற்ற பச்சை பாலை தருவதனால் 

அதை குடிப்பதிலே ப்ரியம் ஒன்றும் இல்லை,எனவே சுவையான பட்சணம் தந்திடுவாய் 
நன்றாக சமைத்த சுவையான ரொட்டியும் ,வெண்ணையும் தருவாய் என் அன்னையே

செப்பு வாய் திறந்து ,மழலை மொழியினிலே மைந்தன் சொல்ல தனை மறந்து 
தன் மெய்யும்  மறந்து கேட்டு சிலைஎனவே நின்றால் யசோதை தானே!

No comments:

Post a Comment